தீபாவளி குறித்து இனவாதத் தன்மையில் பேசி, தனது கருத்தை வெளியிட்டுள்ள தொழிலாளர் சேமநிதி வாரியமான ஈபிஃப். பின் பணியாளர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த வாரியம் இன்று உறுதி அளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஈபிஃப் பணியாளர், தனது செயல் குறித்து ஈபிஃப் நிர்வாகத்திடம் விளக்கம் அளித்து இருப்பதாகவும், தொழிலாளர்களின் நலன் காக்கும் அமைப்பு என்ற முறையில் ஈபிஃப் , தனது உள்விவகார கொள்கைக்கு ஏற்ப அந்த ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த வாரியம் தெளிவுபடுத்தியது.
தங்கள் ஊழியர் ஒருவரின் இச்செயலினால், இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்து இருப்பதை நாங்கள் உணர்கிறோம். ஈபிஃப் ஊழியர்கள், பாரபட்சமாக செயல்படுவதையோ அல்லது பொருத்தமற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதையோ ஈபிஃப் வாரியம் ஒரு போதும் சகிக்காது. மன்னிக்காது. இச்சம்பவத்திற்காக ஈபிஃப் வாரியம் மிகவும் வருத்தம் கொள்வதாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று ஈபிஃப் ஊழியர் ஒருவர், தீபாவளியை கொண்டாடும் இந்துக்களை கெலிங் என்று இழிவான வார்த்தையை பயன்படுத்தியதுடன், தீபாவளிக்கு அவர்கள் வெடிக்கும் பட்டாசு சத்தம், பாலஸ்தீனம், காஸாவில் நடந்த குண்டு வெடிப்புகளையும், பாலஸ்தீனர்களின் துயரத்தையும் நினைவூட்டுகிறது என்றார்.
காப்பார் வட்டாரத்தில் உள்ள கெலிங் - ங்குகள் பட்டாசுகளை வெடிக்கும் போது கோபம் , கோபமாக வருகிறது, தூக்கத்தை கெடுக்கிறார்கள் என்று கூறி மேலும் சில இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி, அந்த ஈபிஃப் ஊழியர், ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவேற்றம் செய்து இருந்தது இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.








