கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் முனையம் 2-இன் வளாகத்தில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட துயரச்சம்பவத்தில், கட்டிடத்தின் விளிம்பிலிருந்து கீழே விழுந்து சீன நாட்டைச் சேர்ந்த 27 வயது பெண் உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் 2.20 மணியளவில், விமான நிலையத்தின் மூன்றாவது மாடி பால்கனியின் விளிம்பில் நின்ற அந்த பெண், அழுதபடி, ஆவேசமாகக் கத்திக்கொண்டிருந்ததாக கேஎல்ஐஏ போலீஸ் தலைவர் எம். ரவி தெரிவித்துள்ளார்.
அவரை அமைதிப்படுத்த விமான நிலைய பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் முயன்ற போதிலும் அது பலனளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உதவ முயன்ற பாதுகாப்பு அதிகாரியிடம், அப்பெண் போராடிய நிலையில், சமநிலை இழந்து KLIA 2 சரக்கு ஏற்றுமதி பகுதியில் கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அப்பெண்ணை மீட்ட மருத்துவ அதிகாரிகள் அவரை புத்ராஜெயா மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
என்றாலும், மாலை 5.09 மணியளவில் அப்பெண் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








