லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் துன் டயிம் சைனுடின், மலேசியா லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு ஆளாகியுள்ள வேளையில் அவரின் நெருங்கிய சகாவான முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவையும் எஸ்பிஆர்எம்- விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
துன் மகாதீர் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இருந்த போது நீண்ட காலமாக நிதி அமைச்சர் பதவியை வகித்து வந்தவரான டாயிம் ஜைனுதீன், SPRM விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருப்பதைப் போல துன் மகாதீரும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முஹமாட் புவாட் சர்காசிஹி கேட்டுக்கொண்டார்.
டாயிம் ஜைனுதீனின் குடும்பத்திற்கு சொந்தமான 60 மாடிகளை கொண்ட 270 கோடி வெள்ளி மதிப்புள்ள மெனாரா இல்ஹாம் கோபுரத்தை எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்துள்ளது.
டாயிம் ஜைனுதீன், நிதி அமைச்சராக பொறுப்பில் இருந்த போது, துன் மகாதீர் நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். தனது 22 ஆண்டு கால ஆட்சியில், அவர் என்ன செய்தார் என்பது குறித்து முழுமையாக ஆராயப்பட வேண்டும் என்று அந்த அம்னோ தலைவர் வலியுறுத்தினார்.
தனது குடும்ப உறுப்பினர்களுக்காக, வேண்டியவர்களுக்காக துன் மகாதீர், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளாரா? என்பது குறித்து ஆராயப் பட வேண்டும்.
நிதி அமைச்சராக இருந்து, ஒரு வர்த்தகராக மாறிய டாயிம் ஜைனுதீனுக்கும், துன் மகாதீரின் பிள்ளைகளும் நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது. முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருக்குமானால் துன் மகாதீர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்று எஸ்பிஆர்எம்- மை டாக்டர். புவாட் சர்காசிஹி கேட்டுக்கொண்டார்.








