பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19-
கையூட்டு குறித்து தகவல் அளிப்போருக்கு ஊக்கத்தொகையை வழங்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் - SPRM-மின் நடவடிக்கையை, முன்னாள் கூட்டரசு அரசாங்கத்தின் அமைச்சர் டத்தோஸ்ரீ சாலே சயீத் கெருவாக் பாராட்டியுள்ளார்.
ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தரப்பினர்களுக்கு அந்நடவடிக்கை பேரிடியாக அமைந்துள்ளது.
தகவல்கள் அளிப்பவர்கள் இருக்கின்றார்கள் என்ற பயத்தால், பொதுச்சேவை ஊழியர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரிடையே பயம் ஏற்படும்.
ஆகையால், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் SPRM-மின் அந்நடவடிக்கையை ஆதரிக்க வேண்டும் எனவும் சாலே கேட்டுக்கொண்டார்.
கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கி கடந்தாண்டு வரையில், கையூட்டு குறித்து தகவல் அளித்திருந்த 514 பொதுச்சேவை ஊழியர்களுக்கு 1 மில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி அண்மையில் கூறியிருந்தார்.
பொதுச்சேவை ஊழியர்களை மட்டும் உள்ளடக்கிய அந்நடவடிக்கையை பொதுமக்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அசாம் பாக்கி குறிப்பிட்டிருந்த நிலையில், சாலே அவ்வாறு கருத்துரைத்துள்ளார்.








