- முன்னாள் துணை அமைச்சர் வலியுறுத்து
மலேசியர்கள், நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை பெற்றவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய தனிநபர் மற்றும் குடும்ப சுயவிவரங்களை பதிவு செய்து கொள்வதற்கு அரசாங்கம் நேற்று தொடங்கியுள்ள பாடு எனப்படும் மத்திய முதன்மை தரவுகள் தளத்தின் பதிவுத் திட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் துணை அமைச்சர் ஒருவர் கேட்டுக்கொண்டார்.
நேற்று ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரையில் மக்கள், தங்களின் விவரக்குறிப்புகளை பாடு மத்திய தரவுகள் தளத்தில் பதிவு செய்து கொள்வதற்கு அரசாங்கம் வாய்ப்பு வழங்கியுள்ளது. எனினும் அதன் பயன்பாட்டில் தனிநபர்களின் விவரக்குறிப்புகளை பாதுகாக்கும் அம்சங்களில் இருக்கக்கூடிய பலவீனங்கள் களையப்பட வேண்டும். அந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரையில் அந்த திட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து அரசாங்கம் உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்று முன்னாள் பாங்கி எம்.பி.யும், டிஏபி யின் வியூக நிபுணருமான ஒங் கியான் மின் கியான் மின் கேட்டுக்கொண்டார்.
இந்த பாடு திட்டத்தில், மற்ற தனிநபர்களின் முழுப் பெயர் மற்றும் அவர்களின் மாய்காட் எண் போன்ற இலகுவாக அணுகக்கூடிய தகவல்களை பயன்படுத்தி, யார் வேண்டுமானாலும் வேறொரு நபரின் பெயரில் கணக்கை திறக்க முடியும். இதனால், உண்மையான நபர், தனது பெயரில் கணக்கு திறப்பதை தடுக்க முடியும் போன்ற பலவீனங்கள் இருப்பதாக ஒங் கியான் மின் அம்பலப்படுத்தியுள்ளார்.
தனிநபர்களின் சமூகவியல், பொருளாதார நிலையை கண்டறியவும், அவர்களுக்கு உதவுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் பாடு முதன்மை தரவுகள் தளம் தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால், அதில் தனிநபர்களின் விவரக்குறிப்புகளை மற்றவர்கள், தங்களின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு அந்த தரவுகள் தளத்தை தவறாக பயன்படுத்திக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக ஒங் கியான் மிங் எச்சரித்துள்ளார்.








