அடுக்குமாடி குடியிருப்புகளில் தீ விபத்து ஏற்படும் போது, பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் கழிவறைகளுக்குள் தஞ்சம் புக வேண்டாம் என கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ அறிவுறுத்தியுள்ளார்.
கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், தீ விபத்துகளில் உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் தீயினால் அல்லாமல், புகையை சுவாசிப்பதாலேயே இறக்கின்றனர் என்றார்.
கழிவறைகளில் போதிய காற்றோட்டம் இல்லாததால், அடர்த்தியான புகை மிக விரைவாக அங்கே பரவி, சில நிமிடங்களிலேயே ஒருவரை மயக்கமடையச் செய்யும் என்று அவர் எச்சரித்தார்.
புள்ளிவிவரப்படி, கடந்த 2025-ஆம் ஆண்டில் கழிவறைகளில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் மேலாண்மை வாரியங்கள், தீயணைப்பு பாதுகாப்பு அமைப்புகளைத் தவறாமல் பராமரிக்க வேண்டும் என்றும், குடியிருப்பாளர்கள் தங்கள் கட்டிடத்தின் பாதுகாப்பு வசதிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.








