மலாக்கா,போக்கோக் மாங்கா பகுதியில் உள்ள கடைவீடு ஒன்றில், மர்மமான முறையில் மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் அழுகிய சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாடகைதாரரைத் தொடர்பு கொள்ள முடியாததால், உரிமையாளர் வீட்டைச் சோதனையிட்டபோது வீசிய துர்நாற்றத்தை அடுத்து இந்த சடலம் கண்டறியப்பட்டது.
வரவேற்பறையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த மெத்தையினுள் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சடலம் இருந்ததால், இது திட்டமிட்ட கொலை என போலீஸார் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்ட நபர் இறந்து 2 வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, இந்த வீட்டை வாடகைக்கு எடுத்த பெண்ணின் 40 வயது மகனை போலீஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 'ஷாபு' போதைப்பொருள் பயன்படுத்தியதும், அவர் மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் இருப்பதும் உறுதியாகியுள்ளது.








