நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கலந்துரையாடல் மற்றும் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கோரி பெறப்பட்ட 143 விண்ணப்பங்களில் 141 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாப்னி அகமது தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஜூலை 18 முதல் 20-ஆம் தேதி வரை இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும், அதே காலகட்டத்தில் போலீசாருக்கு மொத்தம் ஏழு புகார்கள் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் நான்கு புகார்களில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர், இரண்டு வழக்குகள் தேர்தல் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடையவை என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சாட்டி குற்றவியல் சட்டம், பிரிவு 427-ன் கீழ் விசாரணை ஒன்று தொடங்கப்பட்டதாகவும், தீ வைத்து சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக பிரிவு 435-ன் கீழ் மற்றொரு விசாரணை தொடங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இதுவரை தேர்தல் தொடர்பான பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு நிலைமை திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்த அல்சாப்னி அகமது, சட்டத்தை மதித்து ஜனநாயக நடைமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், அமைதியான மற்றும் சுமுகமான தேர்தல் நடைபெற பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.








