மலாக்கா, நவம்பர்.24-
பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் மூன்று கொள்ளையர்களைப் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
போலீசாரின் பட்டியலில் மிகவும் தேடப்பட்டவர்கள் என்று நம்பப்படும் அந்த மூன்று கொள்ளையர்களும் இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் மலாக்கா, அலோர் காஜா, டுரியான் துங்காலில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்த மூவரும் சுடப்படுவதற்கு முன்னதாக கொள்ளையர்களின் ஒருவன் போலீஸ்காரர் ஒருவரை பாராங்கினால் தாக்கியதில் அவரது கை கிட்டத்தட்ட துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.
24 க்கும் 29 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று கொள்ளையர்கள் கேங் DT கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று காலையில் அந்த செம்பனைத் தோட்டத்தில் போலீசார் நடத்திய ஓப் காசா நடவடிக்கையில் இந்தத் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் 30 வயது போலீஸ்காரருக்குக் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று கொள்ளையர்களும் கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்து மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் சிலாங்கூரில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் ஆவர்.
இவர்களால் 13 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது. மூவரையும் சுட்டு வீழ்த்தியது மூலம் 3 வெட்டுக் கத்திகள், கையுறைகள், முகமூடிகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக இன்று மலாக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.








