அலோர் ஸ்டார், மார்ச்.07-
ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் சந்தேகிக்கப்படும், மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு உள்ளூர் ஆண்கள் மீதான விசாரணையை முழுமையாக முடிக்க போலீஸ் துறைக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கையில் 2012-ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான சொஸ்மா பயன்படுத்தக்கூடாது எனச் சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, கைது செய்யப்பட்டவர்களில் சிறுவர்களும் இருப்பதால் மனித உரிமை ஆர்வலர்கள் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய அமைச்சர் சைஃபுடின், "பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் விரிவான விசாரணை மிகவும் அவசியமானது. அந்தச் சூழலில், போலீசார் விசாரணையை முழுமையாகப் பூர்த்தி செய்ய நீண்ட காலம் தேவைப்படுகிறது," என்று நேற்றிரவு கெடாவில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதையும், சட்டத்தின் அடிப்படையிலேயே அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதையும் சைஃபுடின் இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.








