கோப்பெங், நவ. 29-
போதைப்பொருள் உட்கொள்ளும் வர்த்தக வாகனங்களுக்கு எதிராக அமலாக்க அதிகாரிகள் தற்போது ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வரும் வேளையில், விரைவு பேருந்து ஒன்றை அமலாக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்திய போது, அதன் ஓட்டுநர், அந்த பேருந்தை கைவிட்டு, அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
இச்சம்பவம் நேற்று இரவு, பேரா, கோப்பெங், கிராமப்புற உருமாற்று மையமான ஆர்.டி.சி.யில் நிகழ்ந்தது. அந்த பேருந்து ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பேருந்தில் 11 பயணிகள் அமர்ந்திருப்பதையும் பொருட்படுத்தாமல் அவர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அந்த பேருந்து, சாலாக் சவுத்தில் உள்ள டிபிஎஸ் பேருந்து நிலையத்திலிருந்து பினாங்கு நிபோங் திபாலை நோக்கி சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது.
அந்த விரைவு பேருந்தின் ஓட்டுநர் இருக்கையை அமலாக்க அதிகாரிகள் சோதனையிட்ட போது போதைப்பொருள் பயன்பாட்டிற்கான உபகரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேல் விசாரணைக்கு ஏதுவாக இவ்விவகாரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு மன்றத்தின் பேரா மாநில இயக்குநர் முகமட் ஸவாவி ஜக்கரியா தெரிவித்தார்.








