மரம் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்காக, அவரது பெற்றோருக்கு 8 லட்சத்து 24 ஆயிரத்து 180 ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL- க்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி, 30 வயதுடைய புன் முன் லேப் என்பவர் கோலாலம்பூர் ஜாலான் கூச்சிங் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் இருந்த மரம் அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி மார்ச் 24-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஃபாண்டி நஸிலா அப்துல்லா , மாநகர் மன்றத்தின் பராமரிப்புத் தவறு காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகத் தீர்ப்பளித்தார்.
அந்த இளைஞரின் இறுதிச்சடங்கு செலவுக்காக 26 ஆயிரத்து 180 ரிங்கிட்டும், பெற்றோரின் வாழ்வாதார இழப்பீடாக 7 லட்சத்து 68 ஆயிரிம் ரிங்கிட்டும், அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 30 ஆயிரம் ரிங்கிட்டும், மொத்தம் 8 லட்சத்து 24 ஆயிரத்து 180 ரிங்கிட்டை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாலையோர மரங்களைப் பராமரிப்பதும், கண்காணிப்பதும் மாநகர் மன்றத்தின் சட்டப்பூர்வக் கடமையாகும். ஆனால், அந்த மரம் முறையாகப் பராமரிக்கப்பட்டதற்கான எந்தவொரு ஆவணத்தையும் மாநகர் மன்றம், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. மாநகர் மன்றத்தின் இத்தகைய அலட்சியமே ஒரு உயிரைப் பறித்துள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.








