பினாங்கில் உள்ள கல்லறை ஒன்றில் நிர்வாணக் கோலத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஜோடிக்கு எதிராக, போலீசார் மூன்று நாள் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளனர்.
இன்று காலை ஜார்ஜ்டவுன், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த ஜோடிக்கு, இன்று முதல் வரும் வியாழக்கிழமை வரை காவலில் வைத்து விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நடரதுன் நைம் முகமது சைடி அனுமதி வழங்கினார்.
முன்னதாக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விலங்கிடப்பட்ட நிலையில் அந்த ஜோடி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனை உறுதிப்படுத்திய பினாங்க் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில், நேற்று ஜார்ஜ் டவுன் பகுதியில் வெவ்வேறு இடங்களில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
37 வயதுடைய பெண் நேற்று இரவு 8.35 மணியளவில் ஜாலான் பாடாங் தெம்பாக் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும், 58 வயதுடைய ஆண் இரவு 11.10 மணியளவில் சுங்கை ஆரா, பயான் லெப்பாஸ் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முன்பும் பிடிபட்டனர்.
அந்த இருவரும் கல்லறையில் தகாத உறவில் ஈடுபட்டுள்ளதை போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த மார்ச் 22-ஆம் தேதி பினாங்கு, ஆயர் ஈத்தாம் பகுதியில் உள்ள பத்து காந்தோங் சீன இடுகாட்டு கல்லறையில் நடந்தது தெரியவந்துள்ளது.








