கோலாலம்பூர்,ஜன.9
பேருந்துகளுக்காக பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள சாலை வழித்தடங்களை தவறாக பயன்படுத்தும் வாகனமோட்டிகளுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
பொது போக்குவரத்து, குறிப்பாக பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக இந்நடவடிக்கையை போக்குவரத்து அமைச்சு மேற்கொள்ளவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் பிரதான பொது போக்குவரத்து சேவையை வழங்கி வரும் ப்ராசாரானா வெளியிட்டுடள்ள 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி நாள் ஒன்றுக்கு சராசரி 2 லட்சத்து 41 ஆயிரம் பேர் பொது போக்குவரத்தான பேருந்து சேவையை பயன்படுத்துகின்றனர்.
இந்த எண்ணிக்கையை இவ்வாண்டில் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 85 ஆயிரம் பேராக உயர்த்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.








