மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் மீதான நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை மேல்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது சரியானதுதான் என்று கூட்டரசு நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இரண்டுக்கு ஒன்று என்ற பெரும்பான்மை நீதிபதிகளின் வாக்குகள் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அர்மடா நிதி முறைகேடு மற்றும் கள்ளப்பணம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் விடுதலையில் எந்தவொரு தவறும் இல்லை என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், சர்ச்சைக்குரிய ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் பணம் அர்மடா அமைப்பிற்குச் சொந்தமானது அல்ல என்றும், அது சையத் சாதிக்கின் தேர்தல் பிரச்சாரத்திற்காகத் திரட்டப்பட்ட சொந்த நிதியே என்பதும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.








