போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் விதிகளை மீறி தவறான திசையில் காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு, பேருந்து ஓட்டுநர் ஒருவர் வழிவிட மறுத்து, பாடம் புகட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் கோலாலம்பூர், ஜாலான் டெலிமா பகுதியில் நடைபெற்றதாக நம்பப்படுகிறது.
சம்பவத்தன்று, கார் ஓட்டுநர் ஒருவர் நெரிசலைத் தவிர்க்க எதிர்த் திசையில் வேகமாக வந்துள்ளார். அப்போது எதிரே வந்த பேருந்தின் ஓட்டுநர், காருக்கு வழிவிடாமல் தொடர்ந்து முன்னேறி வந்துள்ளார். இதனால் வேறு வழியின்றி அந்த கார் ஓட்டுநர் நீண்ட தூரம் பின்னோக்கியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இறுதியில் சரியான வழித்தடத்திற்குச் சென்ற கார் ஓட்டுநரை நோக்கி, பேருந்து ஓட்டுநர் பேச முயன்றபோது, அவர் எதற்கும் பதிலளிக்காமல் அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றார். இந்தத் துணிச்சலான செயலுக்காகப் பேருந்து ஓட்டுநரை நெட்டிசன்கள் பாராட்டி வரும் அதே வேளையில், ஆபத்தான முறையில் காரைச் செலுத்திய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.








