பெரிக்காத்தான் நேசனல் தலைவர் டான் ஶ்ரீ முகிதீன் யாசினின் மருமகனைப் பிடிப்பதற்குத் தேவைப்படக் கூடிய முக்கிய ஆவணங்களை அரச மலேசியப் போலீஸ் படை இண்டர்போல் எனப்படும் அனைத்துலகப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது.
இதனை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமாட் ஷுஹைலி முஹமாட் சையின் தெரிவித்துள்ளார்.
அந்த முக்கிய ஆவணங்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இடம் இருந்து பெறப்பட்டதைத் தொடர்ந்து அவை உடனடியாக இண்டர்போலிடம் சார்வு செய்யப்பட்டுள்ளதாக ஷுஹைலி விளக்கினார்.
2020 ஆண்டு முகிதீன் யாசின் நாட்டின் பிரதமராக இருந்தபோது, உள்துறை அமைச்சு சம்பந்தப்பட்ட அந்நியத் தொழிலாளர்களுக்கான பதிவு முறை தொடர்பான குத்தகையைப் பெற்றுத் தருவதற்கு, அவரின் மருமகன் முஹமாட் அட்லான், ஒரு கோடி வெள்ளி லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுவது தொடர்பில் தற்போது எஸ்பிஆர்எமினால் அவர் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார்.
அவரும் அவரின் வழக்கறிஞர் மன்சூர் சாட்ட்டும் தற்போது வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.








