புத்ராஜெயா,ஜன.10
டிஏபி புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில டிஏபி ஆலோசருமான டத்தோ ஙெ கூ ஹாம் வீட்டில் இன்று காலையில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து எந்தவொரு தரப்பினரும் சட்டத்தை மீற வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன்
இஸ்மாயில் நினைவுறுத்தினார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பானர்வர்களை அடையாளம் காண்பதற்கு அரச மலேசிய போலீஸ் படை விரிவான புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள், கடும் தண்டனைக்கு வழிவகுக்கும் என்பதை மலேசியர்கள் உணர வேண்டும் என்று அமைச்சர் சைபுதீன் நினைவுறுத்தினார்.
எந்தவொரு தரப்பும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள முயற்சித்தால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.
இன்று அதிகாலையில் பேரா, மஞ்சோங், ஆயர் தாவாரில் உள்ள ஙெ கூ ஹாம் வீட்டில் நடத்தப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதலில் அவரும், அவரின் மனைவியும் உயிர் தப்பியுள்ள வேளையில் மூன்று கார்கள் சேதமுற்றன..
ஷரியா சட்ட நடவடிக்கைக்குழுவில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம் பெற வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தாம் வெளியிட்டதன் காரணமாக இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஙெ கூ ஹாம் தெரிவித்து இருந்தார்.
எனினும் அந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு தாம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.








