கோலாலம்பூர், ஜனவரி.12-
1எம்டிபி ஊழல் குறித்த கடந்த பத்தாண்டு கால விசாரணைகள் மற்றும் அது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளிட்டவற்றை விவரிக்கும் ஒரு புத்தகத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் வெளியிடவுள்ளது.
இந்த வழக்கு குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் சிறந்த புரிதலை ஏற்படுத்துவதற்கும், விசாரணையின் போது எழுந்த தவறான கருத்துக்களைச் சரி செய்வதற்கும் இந்தப் புத்தகமானது ஒரு பொது ஆவணமாகச் செயல்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் துண்டு துண்டான செய்திகளைப் படித்து, அது தான் உண்மையென பொதுமக்கள் முடிவிற்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அஸாம் பாக்கி, அவர்கள் முறையாகப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு முழுவமையான வடிவமாக இப்புத்தகம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, இவ்வழக்கில் குறிப்பிடப்படும் அரபு இளவரசரைப் பொறுத்தவரை, உண்மையில், சாட்சியங்களின் அடிப்படையில், அந்த 'இளவரசர்' என்று அழைக்கப்படுபவர் யார்? அவர் உண்மையிலேயே ஒரு இளவரசரா? போன்ற விவரங்கள் அனைத்தும் நீதிமன்ற ஆவணங்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த வழக்கின் முழுமையான எழுத்துப்பூர்வ தீர்ப்புக்காகக் காத்திருக்கும் எஸ்பிஆர்எம், தீர்ப்பு வெளியிடப்பட்ட பின்னர், அதன் அடிப்படையில், இந்த புத்தகமானது உருவாக்கப்படவுள்ளது.
1எம்டிபி வழக்கில், கடந்த டிசம்பர் மாதம், முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி தொடர்பான 25 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என புத்ராஜெயா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.








