கெடா கூலிம் மற்றும் கோத்தா ஸ்டார் மாவட்டங்களில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 91 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெடா மாநில குடிநுழைவுத் துறை மேற்கொண்ட 'ஒப்ஸ் சாபு' மற்றும் 'ஒப்ஸ் செலெரா' சோதனைகளின் போது, மொத்தம் 120 பேரிடம் நடத்தப்பட்ட ஆவணப் பரிசோதனையில் இவர்கள் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்களில் 72 வங்காளதேசத்தினர், 10 தாய்லாந்து நாட்டவர், 4 பாகிஸ்தானியர், 3 சீன நாட்டவர் மற்றும் 2 இந்தோனேசியர்கள் அடங்குவர்.
செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமை, விசா விதிமுறைகளை மீறியது போன்ற குற்றங்களுக்காக 15 முதல் 57 வயதுடைய இந்த வெளிநாட்டினர் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் நடவடிக்கைக்காக இவர்கள் அனைவரும் பெலாந்தி குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கெடா மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் முகமாட் ரிட்சுவான் தெரிவித்தார்.

















