சுங்கை பூலோ, பிப்ரவரி.14-
மனிதவள அமைச்சு மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பான சொக்சோ ஆகியவற்றின் சார்பில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டு விழாவில் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் கலந்து கொண்டார்.

தனது தொகுதி மக்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பை வழங்கியதுடன் 15 பேருக்கு சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ நிதியை வழங்கி அவர்களின் குடும்ப சுமையைக் குறைப்பதற்கு டத்தோ ஶ்ரீ ரமணன் வழிவகுத்தார்.

மேலும் சுங்கை பூலோ நாடாமன்றத் தொகுதியில் உள்ள 10 அரசாங்க சார்பற்ற அமைப்புகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும் தலா பத்தாயிரம் ரிங்கிட் நிதி உதவியை வழங்கினார்.

தவிர அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய மூவாயிரத்து 500 மடானி கூடைகளை தமது தொகுதியில் உள்ள B40 குடும்பங்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

முன்னதாக தமது உரையில் இவ்வாண்டு 'குதிரை' ஆண்டாகக் கருதப்படுவதால், அதற்கேற்ப அரசுத் திட்டங்கள் வேகமாகவும் திறமையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "மக்களுக்குச் சோதனை வரும் போது அவர்களைக் கைவிடாமல், மீண்டும் எழுந்து நிற்கச் செய்வதே 'மடானி' அரசாங்கத்தின் உறுதிமொழி" என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ ரமணன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வெற்றியைக் குறிப்பிட்ட அமைச்சர், 2025-ஆம் ஆண்டின் இடைக்கால புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் 11.5 லட்சம் பயனாளர்களுக்கு 6.65 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பலன்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது 2024-ஆம் ஆண்டை விட 8.34 சதவீத வளர்ச்சியாகும். ஒவ்வொரு தொழிலாளியும் செலுத்தும் சந்தா என்பது வெறும் சம்பளப் பிடித்தம் மட்டுமல்ல, அது அவர்களின் எதிர்காலத்திற்கான ஒரு பாதுகாப்பான முதலீடு என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.








