கூலிம் ஹை-டெக் தொழிற்பேட்டைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, தமிழ் செய்தி இணையதளத்தைச் சேர்ந்த செய்தியாளர் காளிதாஸ் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டிருப்பதற்கு புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி, சுமார் 300-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகள் அங்கு பணியமர்த்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் புகார் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோதே காளிதாஸ் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராம்கர்பால் சிங், "பொதுநலன் சார்ந்த விவகாரங்களில் செய்தியாளர்கள் களத்திற்குச் செல்வது இயல்பானது. முறையாக ஒத்துழைப்பு வழங்கி, தானாகவே போலீஸ் நிலையத்திற்கு வந்த ஒரு செய்தியாளரை கைது செய்திருப்பது தேவையற்றது; இது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயலாகத் தெரிகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் உள்நோக்கம் ஏதுமில்லை என்பதால் கைது செய்யாமலேயே விசாரணையைத் தொடர முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மலேசிய ஊடக மன்றமும் இச்சம்பவத்திற்கு தனது கவலையைத் தெரிவித்துள்ளது.








