பொருளாதார நிலைமை இன்னும் நிலையற்ற நிலையில் இருப்பதால், மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் ஏற்படும் நிதிச்சுமையை குறைக்க, குடிநீர் கட்டணம், நில வரி மற்றும் அனைத்து கட்டண உயர்வுகளையும் பினாங்கு மாநில அரசு ஒத்திவைக்க வேண்டும் என ஜசெக ஆலோசகர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் வாழ்க்கைச் செலவு மற்றும் நிதிச்சுமையை குறைக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொள்ளும் பொருளாதாரச் சீர்திருத்த அணுகுமுறையை, பினாங்கு முதலமைச்சர் செள கோன் இயாவ் -வும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கிர் ஜோஹாரி- யும் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் பினாங்கில் புதிய குடிநீர் கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 35 கனமீட்டர் அல்லது அதற்கும் குறைவாக நீரைப் பயன்படுத்தும் 82 விழுக்காடு வீடுகளுக்கு மாதத்திற்கு 2 ரிங்கிட் 55 சென் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே, அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய நில வரி விகிதம் அமலுக்கு வரவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் நில உரிமைகள் பாதிக்கப்படும்.
பொருளாதார நிச்சயமற்ற நிலை மற்றும் அமெரிக்கா–ஈரான் மோதலால் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், மக்களின் அடிப்படைச் செலவுச் சுமையை மேலும் அதிகரிக்கக் கூடாது என லிம் குவான் எங் கூறினார்.








