ஆண்டுக்கு 22 முறை சிறப்பு லாட்டரி குலுக்கல்களை நடத்த அனுமதித்த முடிவு, தமது தனிப்பட்ட முடிவு அல்ல என்றும், அப்போது அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த பாஸ் அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சரவையின் கூட்டு முடிவு என்றும் முன்னாள் நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அசிஸ் தெரிவித்துள்ளார்.
சிறப்பு லாட்டரி குலுக்கல்கள் 1999ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருப்பதாகக் கூறிய அவர், தாம் நிதியமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே தேசிய முன்னணி ஆட்சியில் ஆண்டுக்கு 22 குலுக்கல்கள் என்ற வரம்பு இருந்ததாகத் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அப்போதைய அரசாங்கம் அந்த 22 குலுக்கல்கள் என்ற வரம்பை மீண்டும் நடைமுறைப்படுத்தியதாகவும், இதுதொடர்பாக நாடாளுமன்றத்துக்கு அதிகாரப்பூர்வ பதில் மூலம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தம்மை தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டிய பாஸ் இளைஞர் அணித் தலைவர் பிர்ஃதாவுஸ் நவி - யின் கருத்துக்கு பதிலளித்த தெங்கு ஸஃப்ருல், தற்போது மடானி அரசாங்கத்தின் கீழ் சிறப்பு லாட்டரி குலுக்கல்கள் ஆண்டுக்கு எட்டு முறை மட்டுமே நடத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.








