நாட்டில் விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, பயணிகள் வருகை மற்றும் புறப்பாட்டு பாதுகாப்பு நடைமுறைகளில் மேலும் சில பகுதிகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதற்காக உள்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சுகள் இணைந்து 17 நடவடிக்கைகள் கொண்ட பாதுகாப்புத் திட்டத்தைத் தயாரித்துள்ளதாக அவர் கூறினார். இத்திட்டம் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகாலம் என மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்.
போலீஸ்துறை, குடிநுழைவுத் துறை, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை, விமானப் பாதுகாப்பு, மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மற்றும் மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதில் இணைந்து செயல்படும்.
வெளிநாடுகளில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் மலேசியர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிக கவனத்துடன் கையாளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டில் கைது செய்யப்படும் மலேசியர்களை அந்த நாடு தனது சட்டப்படியே நடத்தும் உரிமை கொண்டுள்ளது எனக் கூறிய சைஃபுடின், தேவையானபோது மலேசிய அதிகாரிகள் அவர்களைச் சந்தித்து விசாரணைக்கு உதவ முடியும் என்றார்.
கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து பயணித்த 62 வயது மலேசியப் பிரஜை ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.452 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் பிடிபட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.








