தென் தாய்லாந்தில் வன்முறை அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் ஆயுதக் குழுவினருக்கு மலேசியா ஒருபோதும் பாதுகாப்போ அடைக்கலமோ வழங்காது என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிலும் தாய்லாந்திலும் உள்ள பாதுகாப்பு அமைப்புகள், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பாதுகாப்பு விவகாரங்களை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வழிமுறைகள் மூலம் கையாள்வதாக அவர் கூறினார்.
தாய்லாந்து தரப்பில் ஏதேனும் கவலை தெரிவிக்கப்பட்டால், மலேசியா அதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஆயுதக் கும்பல்காரர்கள் மலேசியாவில் பதுங்கியுள்ளனரா என்பது தொடர்பில் ஆம் அல்லது இல்லை என உறுதியான பதிலை வழங்க அமைச்சர் மறுத்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளும் தங்களது விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், தேவையற்ற பதற்றத்தையோ சந்தேகத்தையோ உருவாக்க வேண்டாம் என்றும் அவர் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.








