ஜார்ஜ் டவுன், மே.31-
நேற்று இரவு ஜார்ஜ் டவுன், ஜாலான் பினாங்கில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஓடியன் திரையரங்குக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பல முக்கிய ஆதாரங்களைத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சேகரித்துள்ளது.
இது குறித்து அதன் மாநில இயக்குநர் முஹமட் ஷோகி ஹம்ஸா கூறுகையில், உயிரிழந்த தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், தீ விபத்து விசாரணை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதன் முடிவுகள் சுமார் 14 நாட்களில் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்படாத நிலையில் இருந்த அந்த இரண்டு மாடி பாரம்பரிய கட்டிடம், உணவகமாக மாற்றும் பணிகளுக்காக புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.








