ஈப்போ, மே.31-
பேராக் மாநிலத்தைச் சேர்ந்த குனுங் பத்து பூத்தே மலைப் பகுதியில், கடந்த மே 24-ஆம் தேதி, மாயமான 49 வயதான ஜஸ்லிண்டா சலுடினைத் தேடும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 10 மணி நிலவரப்படி, 21 மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த 13 பேர், வனத்துறையைச் சேர்ந்த 3 பேர் மற்றும் பேராக் வனத்துறை மலை வழிகாட்டிகள் 5 பேர் அடங்கியுள்ளதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் டத்தோ சயானி சைடோன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மீட்புக் குழு தற்போது பள்ளத்தாக்குப் பகுதியில் இருப்பதால், அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வனவிலங்கு கண்காணிப்புக் கேமரா ஒன்றிலும் ஜஸ்லிண்டா பதிவாகியுள்ளதால், மீட்புக் குழுவினர் அதன் அடிப்படையில் அடுத்தக் கட்டத் தேடுதல் பணியில் இறங்கியுள்ளனர்.








