பினாங்கில், மருத்துவ சாதனமான ஊசி போல் தோற்றமளிக்கும் ஜெல்லி போன்ற விளையாட்டு பொருள் ஒன்று பாதுகாப்பு காரணங்களுக்காகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு பொருளை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால், பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வணிக உரிமம் ரத்து செய்யப்படலாம்.
மேலும், உள்ளூர் மன்ற சட்டங்களின் கீழ் 250 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜெல்லி விளையாட்டு பொருளானது மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அதில் முகப்பரு போன்ற குமிழ்கள் உள்ளன. அவற்றை ஊசியின் மூலம் தண்ணீர் செலுத்தி ‘வெடிக்க’ செய்ய முடியும்.
இந்த பொருள் மருத்துவ சாதனங்களைப் போல தோற்றமளிப்பதுடன் ஒரு முறை பயன்படுத்தி களைந்துவிடலாம் என்ற குறிப்பையும் கொண்டுள்ளது.
இதனால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் தவறாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதால் பல்வேறு பாதுகாப்பு ஆபத்துகள் உள்ளன என்று பினாங்கு சுகாதாரக் குழுத் தலைவர் டேனியல் கூய் தெரிவித்துள்ளார்.








