ஜோகூர் பாரு, ஜனவரி.20-
ஜோகூர் மாநிலத்தின் மனிதவள மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, மனித வள அமைச்சு 116.22 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி மற்றும் மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பிற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிதி ஜோகூர் திறனாளர் மேம்பாட்டு மன்றம் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் தெரிவித்தார்.
இந்த நிதி ஒதுக்கீட்டில், ஜோகூர் திறனாளர் மேம்பாட்டு மன்றத்துக்கான 20 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி, 61 மில்லியன் ரிங்கிட் TVET மாணவர்களுக்கான கடன் உதவி மற்றும் தொழில்துறை பயிற்சித் திட்டங்களுக்கான நிதி ஆகியவை அடங்கும்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு , மின்சார வாகனங்கள் மற்றும் செமிகண்டக்டர் போன்ற அதிநவீன துறைகளில் உள்ளூர் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த இத்திட்டம் இலக்கு வைத்துள்ளது.
இந்த முயற்சி ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு தேவையான தகுதியுள்ள பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜோகூர் மாநிலம் முதலீடுகளில் பெரும் வளர்ச்சியைப் பெற்று வருவதால், அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் போதுமான மற்றும் திறமையான மனித வளத்தை உறுதிச் செய்ய இந்த நிதி உதவும் என்று மந்திரி பெசார் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ், மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் அவரது துணை அமைச்சர் டத்தோ கைருல் ஃபிர்டாவுஸ் அக்பார் கான் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, ஜோகூர் மாநிலத்தின் திறனாளர் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அவர்கள் விரிவாகக் கலந்தாலோசித்து ஒருங்கிணைப்பு செய்தனர்.








