பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 01-
சிப்பாங், KLIA அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகளிடையே நிலவி வந்த லஞ்ச ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 50 அதிகாரிகள், இந்த அக்டோபர் மாதத்தில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.
அனைத்துலக விமான நிலையத்தின் முகப்பிடங்களின் செட்டிங் வழி அந்நியத் தொழிலாளர்களை நாட்டிற்குள் நுழைய விட்டது தொடர்பாக அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் மலேசிய குடிநுழைவுத்துறையின் புதிய தலைமை இயக்குநராக கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி பதவியேற்ற டத்தோ ஜகாரியா ஷபான் - னை தாம் நேரடியாக சந்தித்து பேசப்போவதாக ஆசம் பாக்கி குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது சட்டத்துறை அலுவலகத்தில் உள்ளது. அவர்களின் அனுமதி கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம் என்று ஆசம் பாக்கி தெரிவித்தார்.








