ஜார்ஜ் டவுன், மே.24
தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நேரடியாக ஆலோசனைகளையும் நிதி உதவிகளையும் வழங்க தனது நான்கு முக்கிய நிதி நிறுவனங்களை களமிறக்கியுள்ளது. இதன்படி, தெக்குன் நேஷனல், அமானா இக்தியார் மலேசியா, எஸ்எம்ஈ பேங்க், பேங்க் ரக்யாட் ஆகிய நிறுவனங்கள் நாடு தழுவிய நிலையில் நடைபெறும் ஜுவாலான் மடானி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் நேரடியாகத் தொழில்முனைவோரை அணுகி உதவி வழங்கி வருகின்றன.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவுறுத்தலின்படி, வாடிக்கையாளர்கள் அலுவலகத்திற்கு வருவதை எதிர்பாராமல், அமைச்சே தொழில்முனைவோரைத் தேடிச் சென்று உதவிகளை வழங்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். மேலும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோருக்குக் கடன் தவணைத் தள்ளிவைப்பு, கடன் மறுசீரமைப்பு போன்ற சலுகைகளை வழங்கவும் அமைச்சகம் தயாராக இருப்பதாக அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் உறுதிபடக் கூறினார்.








