புக்கிட் மெர்தாஜாம், மே.24-
பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமின் ஜாலான் குவார் கெரிங் பகுதியில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட்டதாகக் கூறி, 23 மோட்டார் சைக்கிள்களைக் காவற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, இப்பகுதியில் இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதையும், மாற்றியமைக்கப்பட்டப் புகை வெளியேற்றக் குழாய்களைப் பயன்படுத்தி அமைதியைக் குலைப்பதையும் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக செப்ராங் பிறை தெங்கா மாவட்டக் காவற்படைத் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது 60 மோட்டார் சைக்கிள்கள் சோதிக்கப்பட்டு, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 110 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டன. தங்களின் பிள்ளைகள் இத்தகைய ஆபத்தான, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிச் செய்ய பெற்றோர்களும் பாதுகாவலர்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று காவற்படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.








