பாசீர் கூடாங், மார்ச்.01-
ஶ்ரீ ஆலாம் பகுதியில் முன்னாள் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், ஓடும் காரின் முன் பக்கத்தில் தொற்றி ஏறி ஆபத்தான முறையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணித்த 30 வயதுடைய நபர் ஒருவரைப் காவற்படையினர் கைது செய்துள்ளனர். அந்த நபரின் நண்பர்கள் சிலர் காரை வழிமறித்து, கண்ணாடியை உடைத்துச் சேதம் விளைவித்ததோடு பெண்ணின் உடைமைகளையும் பறித்து மிரட்டியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என ஶ்ரீ ஆலாம் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் முஹமட் சொஹாய்மி இஷாக் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பகிரப்பட்ட அந்த 11 விநாடி காணொலியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், சம்பந்தப்பட்ட நபர் போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீது மிரட்டிப் பணம் பறித்தல், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல், போதைப் பொருள் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.








