கோலாலம்பூர், ஏப்ரல்.19-
மலேசியாவின் உண்மையான பலம் இங்குள்ள பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், சமூகங்களிடையே நிலவும் ஒற்றுமையில் அடங்கியுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பன்முகத்தன்மை என்பது ஒரு சவாலல்ல, மாறாக அது தேசிய அடையாளத்தை வலுப்படுத்தி மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சிறந்த அம்சம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
தலைநகரில் நடைபெற்ற 'விசிட் மலேசியா 2026 வைசாகி திருவிழா' நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சீக்கிய சமூகம் ஆற்றி வரும் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டினார். இதன் அடையாளமாக, நாடு முழுவதும் சீக்கிய சமூகத்தின் நடவடிக்கைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் முதற்கட்டமாக 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அவர் அறிவித்தார்.
மலேசியாவை ஓர் இணக்கமான தேசமாக நிலை நிறுத்துவதில் ஒவ்வொரு சமூகத்தின் பாரம்பரியமும் முக்கியமானது என்பதை வலியுறுத்திய பிரதமர், இந்த ஒற்றுமையே நாட்டின் மீள்தன்மைக்கு அடிப்படை என்றும் குறிப்பிட்டார். சீக்கிய சமூகத்தினர் நீண்ட காலமாக மலேசியக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்வதை அவர் தனது உரையின் போது நினைவு கூர்ந்தார்.








