சிலாங்கூர்,அக்டோபர் 07-
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், சிலாங்கூர் மாநில கிளை ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டு தேசிய தின ஒன்றுக்கூடும் நிகழ்ச்சி, நேற்று ஞாயிற்றுக்கிழமை படாங் பெர்ஜுண்டாய், சுங்கை ரம்பாய், யு ஹீ ஸ்வாலோ சிட்டி – உணவகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டத்தோ G. சங்கரன் சிறப்பு வருகையுடன், சிலாங்கூர் மாநிலத் தலைவர் சிங்காரம் வேதாச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்து வட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 300 தொழிலாளர்கள் மற்றும் சங்கப்பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்..
கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர். சுல்கிஃப்லி அஹ்மட் – டின் அரசியல் செயலாளர் சிவபாலன், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சிங்காரம், தமது உரையில் 1957 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றப்பின்னர் தோட்டங்களில் வெள்ளைக்கார முதலாளிகள் தலைமையேற்ற அக்காலக்கட்டத்திலும், தற்போதையை சூழ்நிலையிலும் தோட்டத் தொழில்துறை எவ்வாறு உள்ளது என்பது குறித்து மிக விரிவாக பேசினார்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் தமது உரையில் இன்றைய காலக்கட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு முதலாளிமார்கள் நியாயமாக வழங்க வேண்டிய சம்பளம் குறித்து உரையாற்றினார்.
கொரோனா நோய்த் தொற்று பரவியிருந்த காலக்கட்டத்தில்கூட தோட்டத் தொழிலாளர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில் அரசாங்கமும் கண்டும் காணாததைப் போல் இருந்து வருவது வருத்தத்தை அளிக்கிறது என்று டத்தோ சங்கரன் சுட்டிக்காட்டினார்.
சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் A. நவமுகுந்தன், சங்கத்தின் வளர்ச்சி குறித்து பேசினார். விருந்துடன் கூடிய நடைபெற்ற இந்த நிகழ்வில் பணி ஓய்வுபெற்ற மூன்று தோட்டத் தொழிற்ங்கவாதிகளான புக்கிட் தஹார் குமார், தென்னமரம் ஆயில் மில் ஆறுமுகம் மற்றும் Group Of Estate- டை சேர்ந்த பத்துமலை ஆகியோருக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் டத்தோ சங்கரன் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
காலை 11 மணிக்கு தொடங்கி, பிற்பகல் இரண்டு மணி வரை விருந்துடன் கூடிய இந்த ஒன்றுக்கூடும் நிகழ்விற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் அதிர்ஷ்டகுலுக்களும் நடத்தப்பட்டது.
SPM, STPM கல்வியை முடித்தப்பின்னர் உயர் கல்விக்கூடங்களுக்கு சென்றுள்ள அங்கத்தினர்களின் ஐந்து பிள்ளைகளுக்கு டாக்டர் P.P. நாராயணன் கல்வி அறவாரியத்தின் வாயிலாக நிதி உதவி வழங்கப்பட்டது.
நிகழ்வில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தேசியத் தலைவர M. தனபாலன் சிறப்புரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் வை. தாமசேகரன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.








