பெட்டாலிங் ஜெயா, மார்ச்.17-
மலேசிய ஏர்லைன்ஸிற்கு சொந்தமான விமானம் ஒன்றின் இயந்திரத்தில் தீப் பிடித்துக் கொண்டதற்கு பறவை மோதியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
MH705 விமானம், கடந்த சனிக்கிழமை மாலையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து கோலாலம்பூரை நோக்கி புறப்பட்ட நிலையில் விமானத்தின் இயந்திரத்தில் தீப் பிடித்துக் கொண்டதைத் தொடர்நது அந்த விமானம் மீண்டும், மணிலா, Ninoy Aquino அனைத்துலக விமான நிலையத்திற்கே திரும்பி, பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை.
போயிங் 737-800 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரத்தில் இருந்து தீப்பிழம்புகள் வரும் காட்சியை, பயணி ஒருவர், தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ளார்.
அந்த தீப்பொறிகளைத் தாம் பார்த்ததாகவும், ஆரம்பதில் அவற்றைத் தாம் உணரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று விமானத்தின் இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகளும் புகையும் வந்த காட்சியை பிலிப்பினோ விமான நிறுவன செய்தி தளம் பகிர்ந்து கொண்டது.
மலேசிய ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி பயணிகளும், விமானப் பணியாளர்களும் பாதுகாப்பாக தரையிறங்கியது குறித்து நிம்மதி பெருமூச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கடினமான சூழ்நிலையை அமைதியாகக் கையாண்ட விமானப் பணியார்களுக்கும், பயணிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. தீப்பிடித்தற்கான முழு காரணம் தற்போது ஆராயப்பட்டு வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.








