கோலாலம்பூர், ஜூலை.31-
இவ்வாண்டு பிப்ரவரி 10 ஆம் தேதியில் இருந்து இன்று வரையில் பள்ளி இடைநிற்றல் பிரச்னையில் சம்பந்தப்பட்டிருந்த மாணவர்களில், 4 ஆயிரத்து 758 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர் என கல்வி அமைச்சின் மாணவர் கண்காணிப்பு செயல்முறைப் பிரிவு தெரிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் வெற்றிகரமாக பள்ளிக்குத் திரும்பிய இடைநிற்றல் பிரச்சனையில் சம்பந்தப்பட்டிருந்த 2,708 மாணவர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகரிப்பைக் காட்டுவதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
தரவு அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவை தேசியக் கல்விச் செயல்முறையில் மாணவர்கள் மீண்டும் திரும்பும் விகிதத்தை அதிகரிக்கச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக வோங் கா வோ கூறினார்.
இன்று நாடாளுமன்றத்தில் பள்ளி இடைநிற்றல் விவகாரத்தில் கல்வி அமைச்சின் செயல்திறன் முடிவு விகிதம் குறித்து பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ரொஸ்லான் ஹஷிம் எழுப்பிய கேள்விக்கு, வோங் மேற்கண்டவாறு பதிலளித்தார்.








