பெரியவர்களுக்கான நீச்சல் குளத்தில் இரண்டு வயது சிறுவனைப் போதிய பாதுகாப்பின்றித் தனியாக விட்டு, அவனது மரணத்திற்குக் காரணமான இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த ஜூலை 28 அன்று செந்தூலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 44 வயதான வாயுனி தஞ்சோங் என்ற அந்தப் பணிப் பெண், சிறுவர்களுக்கான நீச்சல் குளத்திற்குப் பதிலாகப் பெரியவர்களுக்கான நீச்சல் குளத்தில் எவ்வித மிதவைகளும் இன்றி அச்சிறுவனையும் அவனது 5 வயது அண்ணனையும் விட்டுவிட்டு, கழிவறைக்குச் சென்றுள்ளார். இதனால் நீரில் மூழ்கிய சிறுவன் மறுநாள் அதிகாலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
நீதிபதி சுஹைலா ஹரோன் முன்னிலையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட அந்தப் பணிப் பெண்ணுக்கு, அவர் கைது செய்யப்பட்ட ஜூலை 29 ஆம் தேதி முதல் இந்தச் சிறைத்தண்டனை அமலுக்கு வருவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.








