நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி துங்கு முஹ்ரிஸ் துங்கு முனாவீர் அவர்களைப் பதவியிலிருந்து நீக்க குறுநில மன்னர்களான நான்கு உண்டாங்குகள் முயற்சி மேற்கொண்ட போதிலும், திட்டமிட்டபடி நாளை வியாழக்கிழமை மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரை அவர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பார் என்று மாநிலச் செயலாளர் டத்தோ முகமட் ஜாஃபிர் இப்ராகிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, நான்கு குறுநில மன்னர்களும் துங்கு முஹ்ரிஸ் மீது முறையற்ற நடத்தை எனக் குற்றம் சாட்டி, அவரைப் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். மேலும்,துங்கு நட்சருதீன் துங்கு ஜாபர்ரை புதிய சமஸ்தானதியாக அவர்கள் முன்மொழிந்தனர்.
ஆனால், இந்த அறிவிப்பை ஏற்க மாநில அரசாங்கம் மறுத்துவிட்டது. குறிப்பாக, இந்த முயற்சியைத் தொடங்கிய சுங்கை உஜோங் குறுநில மன்னர் டத்தோ முபாரக் தோஹாக், ஏற்கனவே பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதால், இந்தத் தீர்மானத்திற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லை என முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் விளக்கம் அளித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள விழாவில் துங்கு முஹ்ரிஸ் தனது மனைவியுடன் பங்கேற்று உரையாற்றுவார். இதற்கான பாதுகாப்பு மற்றும் அணிவகுப்பு ஏற்பாடுகள் சட்டமன்ற வளாகத்தில் தயார் நிலையில் உள்ளன.
இந்த விவகாரம் நெகிரி செம்பிலான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடர் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.








