ஈப்போ, மார்ச்.29-
பேரா மாநிலத்தின் சில பகுதிகளில் முதற்கட்ட வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், அங்குள்ள நான்கு முக்கிய அணைகளில் நீர் வெளியேற்றமும் இருப்பும் சீரான நிலையில் உள்ளதாக உள்கட்டமைப்பு, நீர்த் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முஹமட் நிஸார் ஜமாலுடின் தெரிவித்துள்ளார். Temengor, Bersia, Chenderoh, Kenering ஆகிய அணைகளில் தற்போதைய நீர் வெளியேற்றம் குறைந்தபட்ச அளவை விட அதிகமாக இருப்பதால், மாநிலத்தின் குடிநீருக்கும் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் சிக்கல் ஏதுமில்லை என அவர் உறுதிப்படக் கூறினார். ஒரு வேளை வெப்பம் நீடித்தால், நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நடமாடும் பம்புகளைப் பயன்படுத்துவது, தேவைப்பட்டால் இறுதி நடவடிக்கையாக செயற்கை மழை பெய்ய வைப்பது போன்ற முன்னெச்சரிக்கை திட்டங்களையும் அரசாங்கம் தயார் நிலையில் வைத்துள்ளதாக முஹமட் நிஸார் கூறினார்.








