ஈப்போ அருகே உள்ள செமோர், காந்தான் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள இரண்டு ரப்பர் கையுறை தொழிற்சாலைகளில், நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், மலேசிய குடிநுழைவுத் துறையான JIM மொத்தம் 79 வங்காளதேச நாட்டவர்களைக் கைது செய்துள்ளது.
நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய இந்த நடவடிக்கையில், தொழிலாளர் துறை, மலேசிய போலீஸ் படை, பொது நடவடிக்கை படை மற்றும் தேசிய பதிவிலாக்கா ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர்.
முதல் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின் போது 56 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அதேவேளையில் இரண்டாவது தொழிற்சாலையில் பணி மாற்றத்தின் போது மேலும் 23 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் பேராக் மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ ஜேம்ஸ் லீ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் தங்கள் வருகை விசாவைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், குறிப்பாக நாட்டில் அனுமதிக்கப்பட்ட கால அளவை மீறித் தங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே தலைமை நிறுவனத்தின் கீழ் இயங்கும் இவ்விரு தொழிற்சாலைகளின் நிர்வாகமானது, பிற நிறுவனங்கள் அல்லது துறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தியிருப்பதாக நம்பப்படுகிறது என்றும் ஜேம்ஸ் லீ விவரித்துள்ளார்.








