தெலுக் இந்தான், பெக்கான் பாரு பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த துணிகரக் கொள்ளைச் சம்பவத்தில் 69 வயது முதியவர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.
அதிகாலை 6 மணியளவில், முதியவரின் மனைவி வீட்டின் முற்றத்தில் சாமி கும்பிடுவதற்கு வழிபாட்டுப் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த மூன்று நபர்கள் சுற்றுச்சுவர் ஏறி வீட்டிற்குள் புகுந்தனர். ஓய்வெடுத்துக்கொண்டிருந்த முதியவரைப் பாராங்கத்தியால் மிரட்டி நகைகளைக் கேட்ட கொள்ளையர்கள், அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் வலது கை மற்றும் இடது உள்ளங்கையில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதிர்ஷ்டவசமாக முதியவரின் மனைவி காயமின்றி உயிர் தப்பினார். நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற 20 முதல் 30 வயதுடைய அந்த மூன்று மர்ம நபர்களைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சுவா கோக் லியான் தெரிவித்தார்.








