கோலாலம்பூர், ஏப்ரல்.11-
ஊழல், நிதி மோசடி வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது, நாட்டின் அமலாக்கத் துறையில் உள்ள பலவீனத்தையே காட்டுவதாக மலேசிய ஊழல் கண்காணிப்பு அமைப்பு – MCW கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதன் தலைவர் ஜாயிஸ் அப்துல் காரிம், குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கு முன்பே அவர்களுக்கு எதிராக உடனடி பயணத் தடை விதிக்கத் தவறுவதும், பன்னாட்டுச் சட்டச் சிக்கல்களுமே அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ வழிவகை செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உயர் மட்டக் குற்றவாளிகளுக்குத் தானியங்கி முறையிலான பயணத் தடை விதிப்பது, நாடு கடத்தல் ஒப்பந்தங்களை விரிவுபடுத்துவது, அவர்கள் இல்லாத நிலையிலேயே வழக்கினை நடத்தித் தீர்ப்பளிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.








