கிள்ளான், மார்ச்.06-
உரிமம் இன்றி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்ததாக ஆறு குழந்தைகளின் தந்தை ஒருவர் கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
43 வயதுடைய எம். சைமன் என்ற அந்த நபர், நீதிபதி Sharifah Hascindie Syed Oma முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி மதியம் 3:20 மணியளவில், கிள்ளான், தாமான் செந்தோசா ரியாவில் உள்ள ஒரு வீட்டில், முறையான உரிமம் இன்றி 'Marcas Registradas Smith & Wesson Springfield' ரக துப்பாக்கி மற்றும் 4 உயிர் தோட்டாக்களை வைத்திருந்ததாக சைமன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் , 14 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 6 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 1971-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் கீழ் சைமன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் அனுமதிக்க இயலாது என்பதால் சைமனை ஜாமீனில் விடுவிக்கக்கூடாது என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
எனினும் சைமனுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருப்பதாகவும், அவர் சிகிச்சைப் பெற வேண்டியுள்ளதால் நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிணை வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சைமனை ஜாமீனில் விடுவிக்க அனுமதி மறுத்த நீதிபதி Sharifah Hascindie, அந்த நபரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.








