நைஜர் நாட்டில் நடைபெறும் ராணுவ புரட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் போர் தொடுப்போம் என அண்டை ஆப்ரிக்க நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பிரான்ஸ், அமெரிக்காவிற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
உலகிலேயே அதிக தங்கம் உள்ளிட்ட பல்வேறு வளங்களை கொண்ட கண்டம் ஆப்ரிக்கா. இங்கே இருக்கும் ஊழல், அரசியல் காரணமாக பல்வேறு வளங்கள் இருந்தும் ஆப்ரிக்க நாடுகள் எல்லாம் வறுமையின் பிடியில் உள்ளன. அதோடு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆப்ரிக்காவின் வளங்களை கொள்ளையடிப்பதற்காக அங்கே பிராக்சி வார்களை நடத்தி வருகின்றனர்.
ஆப்ரிக்காவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்ப்பதாக கூறி அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இங்கே உள்ள வளங்களை கொள்ளையடித்து வருகின்றனர். இதற்கு எதிராக இங்கே அடிக்கடி ராணுவ புரட்சிகள் வெடிப்பது வழக்கம்.
உதாரணமாக ஆப்ரிக்காவில் உள்ள புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளில் பிரான்ஸ், அமெரிக்கா ராணுவ தளவாடங்களை அமைத்து அங்கிருந்து தங்கம் மற்றும் யுரேனியத்தை கொள்ளையடித்து வந்தது. அங்கே இருந்த அதிபர்களும் இதை துணையாக இருந்தனர்.
இதையடுத்து அங்கே ராணுவ புரட்சி ஏற்பட்டு இரண்டு நாடுகளிலும் ஆட்சி கவிழ்ந்தது. அங்கே ராணுவம் வந்த பின் பிரான்ஸ், அமெரிக்கா புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறியது. இங்கே ராணுவ புரட்சிகள் நடக்க ரஷ்யா மறைமுக காரணம் என்று கூறப்படுகிறது. இப்போது ஆப்ரிக்காவில் நடக்கும் ராணுவ புரட்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படும் இன்னொரு நபர் புர்கினா பாசோ நாட்டின் ராணுவ தளபதி இப்ராஹிம் டிராரே.








