மலாக்கா, அலோர் காஜா, ஜெலாத்தாங் வர்த்தக மையத்தில் ரெஸ்தோரன் மாமாக் உணவகம் ஒன்றில் உதவித் தொகைக்குரிய சமையல் எண்ணெய் பாகெட்டுகள் உட்பட 550 கிலோவிற்கும் அதிகமான விலைக் கட்டுப்படுத்தப்பட்ட அத்தியாவசியப்பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் ஒரு மணியளவில் உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைக் செலவின அமைச்சின் மலாக்கா மாநில அமலாக்க அதிகாரிகள் அந்த ரெஸ்தோரன் மாமாக் உணவகத்தில் நடத்திய திடீர் சோதனையில் பொருட்கள் பதுக்கல் தெரியவந்துள்ளது.
விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக வாங்கி, அந்த உணவகம் குவிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலில் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதன் இயக்குநர் நொரினா ஜாஃபார் தெரிவித்தார்.
உதவித் தொகைக்குரிய 300 கிலோ சீனி, 250 கிலோ சமைய்ல் எண்ணெய் பாக்கெட், இன்னும் சில அத்தியாவசியப் பொருட்கள் அந்த உணவகத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது மாடியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
உணவகத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களின் மொத்த எடை, 133 குடும்பங்கள் பயன்படுத்தக்கூடியதாகும் என்று அவர் விளக்கினார்.








