கோலாலம்பூர், நவ.8-
பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்து விட்டு, வெளியேறும் பட்டதாரிகள், தங்களுக்கு சராசரி 3 ஆயிரம் வெள்ளி முதல் 4 ஆயிரம் வெள்ளி வரை அடிப்படை சம்பளத்தை எதிர்பார்க்கின்றனர் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வாழ்க்கைச்செலவின அதிகரிப்பை கருத்தில் கொண்டு, தங்களின் வாழ்வியலை தொடர்வதற்கும், நடப்பு சவால்களை சமாளிப்பதற்கும் குறைந்த பட்சம் 3 ஆயிரம் வெள்ளி சம்பளம் வழங்கப்பட்டால் மட்டுமே தங்களால் சமாளிக்க இயலும் என்று பெரும்பாலான பட்டதாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது நகர்ப்புறங்களில் வசிக்கும் பட்டதாரிகளின் மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஜி.டி.ஐ. மீடியா மலேசியா மேற்கொண்ட ஆய்வில் பட்டதாரிகளில் 86 விழுக்காட்டினார் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை குறித்து தங்கள் கவலையையும், ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளனர்.
நிறைவான கல்விக்கற்ற பட்டதாரிகள் என்ற முறையில் தங்களின் கல்வியல் தகுதியை அடிப்படையாக கொண்டு தொடக்க சம்பளமாக மூவாயிரம் வெள்ளியை வழங்கினால் மட்டுமே தங்களால் நடப்பு சவால்களை சமாளிக்க இயலும் என்று அவர்கள் தங்கள் எதிர்பார்ப்பை தெரிவித்ததுடன் அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளனர்.








