கோலாலம்பூர், டிச.2-
ஏ.டி.எம். தானியங்கி இயந்திரப் பண பட்டுவாடா சேவைக்கு வங்கிகள் விதித்து வரும் ஒரு ரிங்கிட் கட்டணம் அகற்றப்பட வேண்டும் என்று தேசிய வங்கி ஊழியர்கள் சங்கமான என்.யு.பி.இ. இன்று வலிறுத்தியுள்ளது.
பேநெட் நிறுவனம், மத்திய வங்கியான பேங்க் நெகாரா மற்றும் இதர 11 நிறுவனங்கள், ஏ.டி.எம். இயந்திரத்தில் பண பட்டுவாடா சேவைக்கு ஒரு ரிங்கிட் கட்டணம் விதிப்பது மிக அபத்தமாகும் என்று என்.யு.பி.இ. - யின் தலைமைச் செயலாலர் ஜே. சோலமன் தெரிவித்தார்.
கோவிட் 19 நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து பொருளாதாரத் தாக்கத்தினால் மீட்சி பெறுவதில் இன்னமும் தட்டுத்தடுமாறிக்கொண்டு இருக்கும் குறைந்த வருமானத்தைக்கொண்ட சாமானிய மக்களுக்கு இந்த ஒரு ரிங்கிட் கட்டணம் என்பது பெரும் சுமையாகும் என்று சோலமன் குறிப்பிட்டார்.
மலேசிய மக்களின் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி ஏ.டி.எம். சேவைக்கு ஒரு ரிங்கிட் கட்டண விதிப்பு முறை அகற்றப்பட்டது. ஆனால் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் அந்த ஒரு ரிங்கிட் கட்டணம் விதிப்பது நடைமுறைப்படுத்தப்பட்டதாக சோலமன் குறிப்பிட்டார்.
குறைந்த வருமான பெறுகின்ற என்.யு.பி.இ. உறுப்பினர்கள் உட்பட சாமனிய மக்களுக்கு ஒரு வெள்ளி கட்டணம் விதிக்கப்பட்டு வருவது அவர்களின் சவால்மிகுந்த பொருளாதார சூழலில் பெரும் சிரமத்தை தர வல்லதாக உள்ளதால் பேநெட் நிறுவனம், பேங்க் நெகாரா மலேசியா மற்றும் இதர 11 நிறுவனங்கள், இந்த ஒரு ரிங்கிட் கட்டண விதிப்பு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சோலமன் கேட்டுக்கொண்டார்.








