ஜன.11
நாட்டில் லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேள்வியில் எந்தவொரு முன்னாள் தலைவரையும் இலக்காக கொண்டிருக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.
நாட்டில் லஞ்சத்தை வேரறுப்பதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மிற்கு அரசாங்கம், முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளது. லஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ள யார் மீதும் நடவடிக்கைக்கு எடுப்பதற்கு அவர்களுக்கு முழு உரிமையிருக்கிறது என்று பிரதமர் விளக்கினார்.
லஞ்ச ஊழல் துடைத்தொழிப்பு என்ற பெயரில் தம்மையும் தமது குடும்ப உறுப்பினர்களையும் இலக்காக கொண்டு பிரதமர் அன்வார் தலைமையிலான அரசாங்கம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வாயிலாக நடவடிக்கை எடுத்து வருவதாக துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பரும், முன்னாள் நிதி அமைச்சருமான துன் டாயிம் ஜைனுதீன் கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பிரதமர் பதில் அளித்தார்.
பழையதோ, புதியதோ, லஞ்ச ஊழலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் பெரிய மீனாக இருந்தாலும் உரிய நடவடிக்கையை எதிர்நோக்கியாக வேண்டும் என்று அன்வார் நினைவுறுத்தினார்.








